புரோக்கோலி பீஸ் புலாவ்
புரோக்கோலி பீஸ் புலாவ்
தேவையானவை:
பாஸ்மதி அரிசி - 2 கப்
மீடியம் சைஸ் புரோக்கோலி - 2 (பூக்களைச் சின்னதாகப் பிரித்துக் கொள்ளவும்)
பச்சைப் பட்டாணி - அரை கப்
நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய தக்காளி - 2
பச்சை மிளகாய் - 5 அல்லது 6
இஞ்சி-பூண்டு விழுது - அரை டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய புதினா இலை - 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய்ப்பால் - 2 கப்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள்தூள் - சிறிது
தாளிக்க:
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கறுஞ்சீரகம் - சிறிதளவு
கிராம்பு - 4 அல்லது 5
பட்டை - 2 ஸ்டிக்
ஏலக்காய் - 3
பிரியாணி இலை - 1
செய்முறை:
பாஸ்மதி அரிசியை நன்றாக அலசி, தண்ணீரில் பத்து நிமிடம் ஊற வைக்கவும். குக்கரை அடுப்பில் வைத்து, எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க கொடுத்தவற்றைச் சேர்த்து வதக்கவும். இதில் வெங்காயம், சிறிது கொத்தமல்லித்தழை, சிறிது புதினா சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கவும். இதில் இஞ்சி- பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். தக்காளி பச்சை மிளகாய் சேர்த்து தக்காளி தோல் சுருங்க வதக்கவும். இதில் பச்சை பட்டாணி, புரோக்கோலி, சிறிது மஞ்சள்தூள் சேர்த்து, இரண்டு நிமிடம் வதக்கவும். தீயை மிதமாக்கி, பாஸ்மதி அரிசியை இத்துடன் சேர்த்து இரண்டு நிமிடம் மெதுவாகக் கிளறவும். வழக்கமாக இரண்டு கப் பாஸ்மதி அரிசிக்கு நான்கு கப் தண்ணீர் ஊற்ற வேண்டும். ஆனால், தேங்காய்ப்பால் இரண்டு கப் இருப்பதால், இரண்டு கப் தண்ணீர் மட்டும் ஊற்றி தேவையான அளவு உப்பு போடவும். மூடி போட்டு மிதமான தீயில் ஒரு விசில் வரும் வரை வைக்கவும். வெந்ததும் மூடியைத் திறந்து மீதம் இருக்கும் கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து அலங்கரித்துப் பரிமாறவும்.
No comments:
Post a Comment