பாலடை காரக் கொழுக்கட்டை
பாலடை காரக் கொழுக்கட்டை
மேல்மாவிற்கு தேவையானவை:
அரிசி மாவு - ஒரு கப்
உப்பு - தேவையானவை
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
தண்ணீர் - ஒன்றரை கப்
பூரணத்துக்குத் தேவையானவை:
பாலடை - அரை கப்
பொட்டுக்கடலை - 2 டேபிள்ஸ்பூன்
சோம்பு - அரை டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - கால் கப்
கொத்தமல்லித்தழை, புதினா - தலா கால் கப்
உப்பு - தேவையான அளவு
காய்ந்த மிளகாய் - 2
தாளிக்க:
கடுகு - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பெருங்காயம் - கால் டீஸ்பூன்
உளுந்து - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
செய்முறை:
அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து ஒன்றரை கப் நீர், தேவையான அளவு உப்பு, நல்லெண்ணெய் சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதித்ததும் அரிசி மாவையும் சேர்த்துக் கிளறி மாவு வெந்ததும் இறக்கவும். ஆறியதும் சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும். பாலடையை அளவான நீர் விட்டு வேகவிடவும். மிக்ஸியில் பொட்டுக்கடலை, சோம்பு மற்றும் காய்ந்த மிளகாயைச் சேர்த்து ஒரு சுழற்று சுழற்றவும். இத்துடன் தேங்காய்த்துருவல், கொத்தமல்லித்தழை, புதினா, உப்பு சேர்த்து நீர் விடாமல் (இலைகளில் உள்ள நீரேபோதுமானது) சற்றுக் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.
அரைத்தவற்றை வெந்த பாலடையுடன் சேர்த்துக் கலக்கவும். வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, பெருங்காயம், உளுந்து, கறிவேப்பிலைச் சேர்த்து தாளித்து கலந்து வைத்துள்ள கலவையையும் சேர்த்துப் புரட்டி எல்லாம் சேர்ந்து வரும் போது இறக்கவும்.
ஒரு வாழை இலை (அ) பாலிதீன் கவரில் உருட்டி வைத்த அரிசி மாவு கலவையை உள்ளங்கையில் வைத்து, குழிவான கிண்ணமாக தட்டி வைக்கவும். அதன் உள்ளே தயார் செய்த பாலடை பூரணத்தை வைத்து மூடி ஆவியில் வேகவிட்டு எடுத்துப் பரிமாறவும்.

No comments:
Post a Comment