ஹைதராபாதி சப்ஜி பிரியாணி
ஹைதராபாதி சப்ஜி பிரியாணி
தேவையானவை:
பாஸ்மதி அரிசி - அரை கிலோ
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2
பிரியாணி இலை - 1
பெரிய வெங்காயம் - 3 (அரை நிலா வடிவம் போல நறுக்கவும்)
தக்காளி - 3 (பொடியாக நறுக்கவும்)
உப்பு - தேவையான அளவு
சீரகம் - அரை டீஸ்பூன்
அன்னாசிப்பூ - 2
கறுப்பு ஏலக்காய் - 2
காஷ்மீரி மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4 (நெய்யில் வதக்கி மிக்ஸியில் அரைக்கவும்)
கெட்டித் தயிர் - 200 மில்லி
இஞ்சி-பூண்டு விழுது - தலா 1 டேபிள்ஸ்பூன்
நெய் - 50 மில்லி
எண்ணெய் - 50 மில்லி
புதினா - ஒரு கைப்பிடி
கொத்தமல்லித்தழை - 2 கைப்பிடி
கேரட்- பெரியது 1
பீன்ஸ் - 30 கிராம்
உருளை - 1
காலிஃப்ளவர் - 30 கிராம்
பச்சைப் பட்டாணி - 30 கிராம்
கீரா வாட்டர் - 1 டேபிள்ஸ்பூன்
ரோஸ் வாட்டர் - 1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சைப்பழம் - 1
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை (ஒரு டேபிள்ஸ்பூன் பாலில் பத்து நிமிடம் ஊற வைக்கவும்)
அலங்கரிக்க:
ஃப்ரைடு ஆனியன் - 4 டேபிள்ஸ்பூன்
ஃப்ரைடு முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன்
திராட்சை (கிஸ்மிஸ்) பழம் - 1 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தழை, புதினா - சிறிதளவு
செய்முறை:
காய்கறிகளைக் கழுவி ஒரு இஞ்ச் நீளத்துக்கு நறுக்கி தனியாக வைக்கவும். அரிசியை
20 நிமிடம் ஊற வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி தலா ஒரு பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து, பிரியாணி இலை, அன்னாசிப்பூ, சீரகம் போட்டு பொரிந்ததும், வெங்காயம் சேர்க்கவும். இதில் இஞ்சி-பூண்டு, பச்சை மிளகாய் விழுது சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கியதும், தக்காளி, காஷ்மீரி மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் போட்டு வதக்கவும். புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து சுருள வதங்கியதும், நறுக்கிய காய்கறிகள், பச்சைப் பட்டாணி போட்டு மிதமான தீயில் வதக்கி இந்த மாசாலாவை தனியே எடுத்து வைக்கவும்.
காய்கறிகள் பாதி வெந்ததும் தயிர், எலுமிச்சை, உப்பு சேர்த்து வதக்கவும்.
மற்றொரு அடுப்பில் பாத்திரத்தை வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதித்ததும், ஊற வைத்த அரிசியை வடிகட்டி சேர்த்து உப்பு, மீதம் இருக்கும் ஏலக்காய், பட்டை, கிராம்பு, சிறிது புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து முக்கால் பாகம் வேக விட்டு வடித்து வைக்கவும்.
இனி, ஏற்கெனவே தயாரித்து வைத்துள்ள மசாலாவை இரண்டு பகுதியாகப் பிரித்து எடுங்கள். ஒரு பாத்திரத்தில் ஒரு பங்கு மசாலா அதன் மேல் வெந்த பாஸ்மதி அரிசி, அதன் மேல் மசாலா, அதன் மேல் பாஸ்மதி அரிசி என்பது போல பரப்பி வைத்துக் கொள்ளவும். இதன் மேல் கீரா வாட்டர், ரோஸ் வாட்டர், குங்குமப்பூ ஊறிய பால், பாதி நெய் ஊற்றி மூடி போடவும்.
அடுப்பில் ஒரு தோசைக்கல்லை வைத்து தீயை முற்றிலும் குறைத்து அதன் மேல் பிரியாணி அரிசி பாத்திரத்தை வைத்து மூடி போடவும். மூடியின் மேல் கனமான பொருளை வைத்து, இருபது நிமிடம் வேக விடவும். பிறகு, மூடியைத் திறந்து, மீதம் இருக்கும் நெய் ஊற்றி, லேயர் லேயராக பிரியாணியை எடுத்து, அலங்கரிக்கக் கொடுத்தப் பொருட்களை கொண்டு அலங்கரித்துப் பரிமாறவும்.
No comments:
Post a Comment