மக்னி கிரேவி
மக்னி கிரேவி
மக்கன் என்றால் வெண்ணெய் (பட்டர்) என்று அர்த்தம். பலவிதமான கிரேவிக்களைத் தயார் செய்வதற்கு அடிப்படையாக இந்த மக்னி கிரேவி பயன்படுத்தப்படுகிறது. இது தக்காளியைக்கொண்டு தயாரிக்கப்படும் கிரேவி.
கிரேவி செய்வதற்கு:
பெரிய வெங்காயம் - ஒன்றில் பாதி
பெங்களூர் தக்காளி - 5
முந்திரிப்பருப்பு - 50 கிராம்
தாளிக்க:
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
சீரகம் - கால் டீஸ்பூன்
அன்னாசிப்பூ - சிறிய துண்டு
மசாலாவுக்கு:
நறுக்கிய பச்சைமிளகாய் - 1
இஞ்சி விழுது - 1 டீஸ்பூன்
பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
உப்பு இல்லாத வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
செய்முறை:
தக்காளியின் மேலே கத்தியால் குறுக்கும் நெடுக்குமாக (கிராஸ் சிம்பல் போல) கீறி விடவும். இதை ஒரு பாத்திரத்தில் இட்டு, மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு வேக விடவும். தக்காளியின் தோல் உரிந்து வருவது போல இருக்கும் நிலையில், அடுப்பை அணைக்கவும். தக்காளி வேக வைத்த தண்ணீரில் ஒரு டம்ளரை எடுத்துத் தனியாக வைக்கவும். வெந்த தக்காளி, முந்திரிப்பருப்பு, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு, மீதம் இருக்கும் வேக வைத்த தண்ணீரோடு சேர்த்து அரைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளிக்கவும். இதில் பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். ஒரு டம்ளர் தண்ணீரில் காஷ்மீரி மிளகாய்த்தூளைக் கரைத்துத் தாளித்தவற்றில் ஊற்றவும். கலவை நன்கு வேக ஆரம்பித்ததும் அதில் மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள், சீரகத்தூள் போட்டு நன்கு கிளறவும். கலவை ஒரு கொதி வந்த பிறகு, அரைத்து வைத்திருக்கும் தக்காளி விழுதைச் சேர்த்து தீயை மிதமாக்கி பச்சை வாசனை போக கொதிக்க விடவும். இதில் சர்க்கரை சேர்க்கவும். கலவை வெல்வெட் போன்று பளபளப்பாக வரும்போது வெண்ணெய் சேர்த்துக் கிளறி, உப்பு சேர்க்கவும். இதில் கரம் மசாலாத்தூள் சேர்த்து, மிதமான தீயில் ஏழு நிமிடம் வைத்திருந்து இறக்கினால், மக்னி கிரேவி ரெடி.
No comments:
Post a Comment