பின் வீல்/ ட்ரை கலர் பூரி
பின் வீல்/ ட்ரை கலர் பூரி
தேவையானவை:
கோதுமை மாவு - 600 கிராம் + மாவு தேய்க்க சிறிதளவு
வேக வைத்து அரைத்த பாலக் கீரை - 50 கிராம்
வேக வைத்து அரைத்த பீட்ரூட் - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
வாய் அகன்ற மூன்று கிண்ணங்களில் தலா 200 கிராம் மாவைத் தனித்தனியாகச் சேர்க்கவும். தேவையான அளவு உப்பையும் சேர்க்கவும். முதல் கிண்ணத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சப்பாத்திக்கு மாவு பிசைவது போல பிசையவும். இரண்டாவது கிண்ணத்தில் தண்ணீருக்கு பதில் பாலக்கீரையைச் சேர்த்து சப்பாத்தி மாவாகப் பிசையவும். மூன்றாவது கிண்ணத்தில் பீட்ரூட்டைச் சேர்த்து மாவாகப் பிசையவும். இனி பிசைந்து உருட்டிய மூன்று மாவுகளில் இருந்து சிறிய சிறிய உருண்டைகளாகத் தனித்தனியாகப் பிரித்து சின்ன பூரிகளாக உருட்டவும். உருட்டிய பாலக்கீரை பூரியின் மேல் ப்ளையின் பூரியின் மாவை வைத்து, அதன் மேல் பீட்ரூட் மாவை வைத்து அழுத்தி ஒரே பெரிய பூரியாக தேய்க்கவும். இதனை மீண்டும் உருட்டி உருண்டைகளாக்கி, அதில் இருந்து சிறிய சிறிய உருண்டைகளைப் பிரித்தெடுக்கவும். இதை மீண்டும் மாவு தொட்டு பூரிகளாக உருட்டினால் மூன்று வர்ண பூரி நிறத்தில் அதிகமாக பூரிகள் கிடைக்கும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூரிகளாக சுட்டெடுத்தால் பின் வீல் அல்லது ட்ரை கலர் பூரி ரெடி. இது உருளைக்கிழங்கு மசாலா அல்லது காரமான கிரேவியோடு தொட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

No comments:
Post a Comment