லக்னோவி முருக் பிரியாணி
லக்னோவி முருக் பிரியாணி
தேவையானவை:
பாஸ்மதி அரிசி - 300 கிராம்
பெரிய வெங்காயம் - 2
பெங்களூர் தக்காளி - 4
தயிர் - 200 மில்லி
ஃபிரெஷ் க்ரீம் - 50 மில்லி
இஞ்சி-பூண்டு விழுது - தலா 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்+ ஒரு சிறிதளவு
கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
எலுமிச்சைப்பழம் - 1
புதினா - அரை கைப்பிடி
கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி
பச்சை மிளகாய் - 2
கோழிக்கறி - 300 கிராம்
நெய் - 50 மில்லி
எண்ணெய் - 50 மில்லி
குங்குமப்பூ - சிறிதளவு (2 டேபிள்ஸ்பூன் காய்ச்சிய பாலில் பத்து நிமிடம் ஊற வைக்கவும்)
ரோஸ் வாட்டர் - 1 டீஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா இரண்டு.
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பாஸ்மதி அரிசியை இரண்டு முறை தண்ணீரில் கழுவி, பதினைந்து நிமிடம் ஊற வைத்து பட்டை, கிராம்பு, ஏலக்காய் தலா ஒன்று, உப்பு, சிறிது புதினா, சிறிது கொத்தமல்லித்தழை சேர்த்து முக்கால் வேக்காடு வேக வைத்து தனியாக வைக்கவும்.
கோழிக்கறியைக் கழுவி அரை டீஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, ஒரு சிட்டிகை மஞ்சள்தூள், அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், சிறிதளவு உப்பு, ஃபிரெஷ் க்ரீம், தயிர் சேர்த்து பதினைந்து நிமிடம் ஊற வைக்கவும். பச்சை மிளகாய்களை ஸ்லைஸ்களாக நறுக்கி வைக்கவும். வெங்காயத்தை அரை நிலா வடிவத்துக்கு நீளமாக நறுக்கி வைக்கவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி, மீதமுள்ள பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு வதக்கி, வெங்காயத்தைச் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும். இதில் மீதமுள்ள இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, மீதமுள்ள புதினா, கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய் ஸ்லைஸ், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் கரம் மசாலாத்தூளைச் சேர்த்து வதக்கவும்.
பிறகு, ஊற வைத்த கோழிக்கறியைச் சேர்த்து மிதமான தீயில் பாதி வேக்காடு வேகும் வரை வதக்கவும். இந்தப் பாத்திரத்தை எடுத்துவிட்டு, அடுப்பில் ஒரு தோசைக்கல்லை வைக்கவும். அடுப்பை பற்றவைத்து தோசைக்கல்லின் மேல் கோழிக்கறி இருக்கும் பாத்திரத்தை வைத்து, அதில் முக்கால் பாகம் வெந்த பாஸ்மதியைப் பரவலாகத் தூவவும். இதன் மேல் குங்குமப்பூ ஊறிய பாலை ஊற்றி மூடி போட்டு அதன் மேல் கனமான ஒரு பொருளை வைத்து இருபது நிமிடம் குறைந்த தீயில் 'தம்' போடவும்.
இருபது நிமிடம் கழித்து மூடியைத் திறந்து நெய், ரோஸ் வாட்டர் ஊற்றி கிளறி, லேயர் லேயராகப் பரிமாறவும்.
No comments:
Post a Comment