பாலடை மசாலா உருண்டைக்குழம்பு
பாலடை மசாலா உருண்டைக்குழம்பு
தேவையானவை:
பாலடை - அரை கப்
துவரம்பருப்பு - 4 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 3 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
பெருங்காயம் - சிட்டிகை
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
குழம்பிற்கு:
கெட்டியான புளிக்கரைசல் - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
சோம்பு - கால் டீஸ்பூன்
மிளகு, மல்லி (தனியா) - தலா ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
தேங்காய்த்துருவல் - கால் மூடி
பூண்டு - 3 பல்
தக்காளி - ஒன்று
தாளிக்க:
நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பாலடையைச் சேர்த்து அரைமணி நேரம் ஊற விடவும். துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு மற்றும் காய்ந்த மிளகாயை தண்ணீரில் சேர்த்து அரைமணி நேரம் ஊற விடவும். ஊறியவற்றை மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்ததும், பாலடை, பெருங்காயம், உப்பு சேர்த்து ஒரு சுழற்று சுழற்றி எடுக்கவும். அரைத்தவற்றை உருண்டைகளாக்கி வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், உருட்டிய உருண்டைகளைச் சேர்த்துப் பொரித்து எடுக்கவும். விருப்பப்பட்டவர்கள் உருட்டிய உருண்டைகளை ஆவியிலும் வேகவைத்து எடுக்கலாம். வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடனாதும் சோம்பு, மிளகு, மல்லி (தனியா), காய்ந்த மிளகாய் மற்றும் தேங்காய்த்துருவலை வறுத்து எடுத்து ஆறவைக்கவும். ஆறியதும், மிக்ஸியில் தண்ணீர்விட்டு பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும்.
மீண்டும் வாணலியை அடுப்பில் வைத்து ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும், பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் தக்காளியைச் சேர்த்து கரைய வதக்கவும். இத்துடன் புளிக்கரைசல் ஊற்றி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். ஒரு கொதி வந்ததும் அரைத்த விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக மீண்டும் கொதிக்கவிடவும். மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் தாளிக்கக் கொடுத்தவற்றைச் சேர்த்து தாளித்து கொதித்துகொண்டிருக்கும் கிரேவியில் ஊற்றவும். பிறகு பொரித்த உருண்டைகளை கிரேவியில் சேர்த்துக் கலக்கி ஓரிரு நிமிடங்கள் விட்டு, இறக்கிப் பரிமாறவும். தயிர் சாதம் மற்றும் ஃப்ளைன் சாதத்துக்கு ஏற்ற குழம்பு.

No comments:
Post a Comment