மஷ்ரூம் சமோசா
மஷ்ரூம் சமோசா
தேவையானவை:
சிப்பி (அ) மொட்டுக் காளான் - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 150 கிராம்
பச்சைமிளகாய் - 4
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு - ஒரு டேபிள்ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்
மைதா மாவு - 300 கிராம்
அரிசி மாவு - 100 கிராம்
ஓமம் - 2 டீஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 10 மில்லி
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
சமோசாவுக்கான மசாலா தயாரிக்க:
காளானை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்துகொள்ளவும். காளான், வெங்காயம், பச்சைமிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கித் தனியே வைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, கடுகு, பொடியாக நறுக்கி வைத்திருக்கும் காளான், வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும். இத்துடன் பச்சைமிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், சிறிதளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் விட்டு கலவை கிரேவி பதத்துக்கு வந்ததும் இறக்கினால், மசாலா கலவை தயார்.
மைதா மாவு, அரிசி மாவு, ஓமம், தேவையான அளவு உப்பு இவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசையவும். வாணலியில் சிறிதளவு எண்ணெயைக் கைப்பொறுக்கும் அளவுக்கு சூடாக்கி, மாவுக் கலவையில் ஊற்றவும். இதை சப்பாத்தி மாவுப் பதத்துக்கு நன்றாகப் பிசைந்துகொள்ளவும். மாவை மூடி, அரை மணி நேரம் தனியாக வைக்கவும். பாலிதீன் அல்லது காட்டன் துணியிலும் சுற்றி வைக்கலாம்.
பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து, சப்பாத்திக் கட்டையில் வைத்து சதுரமாகத் தேய்த்து, கோன் போன்று செய்துகொள்ளவும். கோனின் நடுவில், தயாராக வைத்துள்ள மசாலா கலவையை சிறிதளவு வைக்கவும். மசாலாவானது வெளியே வராதபடி, கோன் ஓரங்களை சிறிதளவு தண்ணீரைத் தொட்டு, ஒட்டவும். பிறகு, ஒரு கனமான வாணலியில் பொரிக்கத் தேவையான எண்ணெயை ஊற்றி சமோசாக்களைப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். இதை தக்காளி சாஸுடன் பரிமாறினால், டேஸ்டியோ... டேஸ்டி!

No comments:
Post a Comment