ஆலு பராத்தா
ஆலு பராத்தா
தேவையானவை:
பராத்தா செய்ய: கோதுமை மாவு - 250 கிராம்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
ஆலு மேத்தி ஸ்டஃபிங் செய்ய:
உருளைக்கிழங்கு - 2 மீடியம் சைஸ் (வேக வைத்து தோல் உரித்து மசிக்கவும்)
வெந்தயக் கீரை இலைகள் - 75 கிராம்
பச்சை மிளகாய் - 2 அல்லது 3
இஞ்சி - 1 துண்டு
கேரட் - 40 கிராம் (துருவியது)
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - ஒரு சிட்டிகை
எண்ணெய் - 3 டீஸ்பூன்
சீரகம் - கால் டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
நெய்/எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
பராத்தா செய்யக் கொடுத்தவற்றை மிருதுவாகப் பிசைந்து இருபது நிமிடம் ஒரு துணியால் மூடி வைக்கவும். இனி ஸ்டஃபிங்குக்கு கொடுத்த இஞ்சியை மிக்ஸியில் சேர்த்து பேஸ்ட்டாக்கிக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து சீரகத்தைச் சேர்த்து வெடித்ததும், பெருங்காயத்தூள், இஞ்சி பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதில் வெந்தய இலைகளைச் சேர்த்து வதக்கி உப்பு, சர்க்கரை சேர்த்து வதக்கவும். இதில் மசித்த உருளை, மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து சில நிமிடம் நன்கு வதக்கவும். இறுதியாக சீரகத்தூள், துருவிய கேரட், எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாகக் கிளறி அடுப்பை அணைத்து ஆற விடவும். இதை எலுமிச்சை வடிவிலான ஏழு சின்ன உருண்டைகளாக உருட்டி தனியாக வைக்கவும்.
பராத்தா மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். இதில் ஓர் உருண்டையை எடுத்து மாவு தூவி வட்டமாக உருட்டி, ஆற வைத்த ஸ்டஃபிங் உருண்டையை எடுத்து வைத்து மாவை மூடவும். பின்னர் மெதுவாக வட்டமாகத் தேய்க்கவும். அதிகமாக அழுத்தி தேய்க்க வேண்டாம். அடுப்பில் தவாவை வைத்து சூடானதும் பராத்தாவைப் போட்டு, சுற்றிலும் எண்ணெய் அல்லது நெய் விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுத்து வைக்கவும். இதன் மேல் நெய் அல்லது வெண்ணெயை சிறிது தடவி நான்கு பீஸ்களாக வெட்டி டிபன் பாக்ஸில் வைத்து பூந்தி ரைத்தா அல்லது தயிர் கொடுத்து அனுப்பவும்.

No comments:
Post a Comment