மஷ்ரூம் பராத்தாஸ்
மஷ்ரூம் பராத்தாஸ்
தேவையானவை:
மொட்டுக் காளான் - 200 கிராம்
கோதுமை மாவு - இரண்டரை கப்
எண்ணெய் - 50 மில்லி
பெரிய வெங்காயம் - 50 கிராம்
பச்சைமிளகாய் - 3
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
பூண்டு - 3 பல்
கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை மற்றும் புதினா - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
காளானை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்துகொள்ளவும். காளான், வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லித்தழை, புதினா ஆகியவற்றைப் பொடியாக நறுக்கித் தனியே வைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து, நறுக்கிய காளான், வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லித்தழை, புதினா, கரம் மசாலாத்தூள் சேர்த்து பச்சைவாசனை போகும் வரை நன்கு வதக்கி இறக்கினால் மசாலா ரெடி.
கோதுமை மாவுடன் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து அரை மணிநேரம் ஊற வைக்கவும். மாவை சின்னச்சின்ன உருண்டைகளாக உருட்டியெடுத்து, வட்டமாகத் தேய்த்துக் கொள்ளவும். தேய்த்த ஒரு வட்டத்தின் நடுவே சிறிதளவு மசாலாவைப் பரவ விட்டு மற்றொரு உருட்டிய மாவால் மூடவும். ஓரங்களை சிறிதளவு தண்ணீர் தொட்டு ஒட்டவும். உள்ளே இருக்கும் கலவை வெளியே வராதவாறு மெதுவாக சப்பாத்திக் கட்டையை வைத்துத் தேய்க்கவும். இதை சூடான தோசைக்கல்லில் இட்டு இரண்டு பக்கமும் வேகவிட்டு எடுத்து (விருப்பமுள்ளவர்கள் எண்ணெய் விட்டுக்கொள்ளலாம்) , நான்கு பாகங்களாக நறுக்கி சூடாகப் பரிமாறவும். ருசியான மஷ்ரூம் பராத்தா தயார்.

No comments:
Post a Comment