இட்லி பர்கர்
இட்லி பர்கர்
தேவையானவை:
இட்லி - 4
பெங்களூர் தக்காளி - ஒன்று
வெள்ளரிக்காய் - ஒன்று
முட்டைகோஸ் - தேவையான அளவு
சீஸ் - சிறிதளவு
வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
தக்காளி சாஸ் - அரை டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கட்லெட் செய்ய:
உருளைக்கிழங்கு - 2
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
சீஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்
கஸூரி மேத்தி (உலர்ந்த வெந்தய இலைகள்) - ஒரு டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள்- அரை டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்து, மசித்துக்கொள்ளவும். கொத்தமல்லித்தழை, தக்காளியைப் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். வெள்ளரிக்காயை தோல் நீக்கி, நறுக்கித் தனியே வைத்துக்கொள்ளவும். முட்டைகோஸின் மேலே உள்ள முதல் இரண்டு இலைகளை மட்டும் அகற்றிவிட்டு, உள்ளே இருக்கும் இலைகளை தனியாக எடுத்து வைக்கவும். ஒரு பவுலில் மசித்த உருளைக்கிழங்கு மற்றும் கட்லெட் செய்யத் தேவையானப் பொருட்களை ஒன்றாகச் சேர்த்துக் கலந்து கட்லெட் வடிவத்தில் தட்டித் தனியே வைத்துக்கொள்ளவும். (கட்லெட் மற்றும் இட்லி ஒரே அளவில் இருந்தால், பார்ப்பதற்கு அழகாக இருக்கும்). வாணலியை சூடுசெய்து வெண்ணெயை விடவும், வெண்ணெய் உருகியதும், தயாராக உள்ள கட்லெட்டை இதில் போட்டு இரண்டு பக்கமும் புரட்டி எடுக்கவும். மற்றொரு வாணலியை சூடாக்கி வெண்ணெய் விட்டு, இட்லியை லேசாக ரோஸ்ட் போல் புரட்டி எடுக்கவும். பின், ஒரு தட்டில் இட்லியை வைத்து அதன் மேல், ஒரு கட்லெட்டை வைக்கவும். இதன் மேல் வட்டமாக நறுக்கி வைத்திருக்கும் தக்காளி, வெள்ளரிக்காய், முட்டைகோஸ், துருவிய சீஸ் போன்றவற்றை வைக்கவும் . அதன் மேல், உப்பு மற்றும் மிளகுத்தூள் தூவி, இதன் மேல் மற்றொரு இட்லியை வைக்கவும். இந்த கட்லெட் மற்றும் இட்லி செட்டானது பிரிந்து போகாமலிருக்க, இவற்றின் நடுவில் டூத் பிக்கை சொருகிப் பரிமாறலாம். இதற்கு தக்காளி சாஸ் நல்ல சாய்ஸ்.

No comments:
Post a Comment